தா.பழூர் சிவன்கோயில்
ஜெயம்கொண்டத்தில் இருந்து தெற்கில் கும்பகோணம் செல்லும் சாலையில் 15 கிமி தூரத்தில் உள்ளது தா பழூர். கும்பகோணத்தில் இருந்து 17 கிமி தூரம்.
தா.பழூர் என்பதின் விரிவாக்கம் தாதம்பேட்டை பழூர் என்பதாகும். பழூர் என்பது ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் வந்தது.
“மணப்பாறை மாடு கட்டி” பாடல் வரிகளை எழுதிய மறைந்த அ.மருதகாசி அவர்கள் இந்த தா.பழூர் உரை சார்ந்தவர்.
இங்கு உள்ள சிவன் கோயில் கிழக்கு நோக்கிய பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மூன்றுநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. அதனை கடந்தால் நந்தி மண்டபம் இறைவன் கருவறை முன் இடை நாழி அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. முகப்பு மண்டபம் அகன்று உயர்ந்து நிற்கிறது, முகப்பில் ரிஷபகாட்சி சுதைகள் அலங்கரிக்கின்றன, கூம்பு வடிவ விதானத்தின் உச்சியில் கலசங்கள் பொருத்தப்பட்டு கம்பீரமான தோற்றப் பொலிவு கிடைக்கிறது.
இறைவன்: விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி
இறைவன் கருவறை வாயிலில் வினாயகரும் பாலமுருகனும் உள்ளனர். கூம்பு வடிவ மண்டபங்கள் இக்கோயில் நாயக்கர் கால திருப்பணி பெற்றிருக்கலாம் என சொல்கின்றன. இவ்விறைவன் சுயம்பு மூர்த்தி என கூறுகின்றனர்.
இக்கோயில் காசிக்கு நிகரான திருக்கோயில் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாது இத்தல இறைவன் சூன்ய தோஷம் நீக்குபவர் என கருதப்படுகிறது.
திதி என்றால் என்ன? திதி சூன்யம் என்றால் என்ன?
திதி என்பது சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் பொறுத்து தினமும் மாறுவது திதிகள் ; இது வளர்பிறை தேய்பிறை திதிகள் என இருக்கின்றன.
திதி சூன்யம் என்றால் ஒரு குறிப்பிட திதியில் பிறந்தால் குறிப்பிட ராசிகள் சூன்யம் ஆகும். அதாவது பலத்தை இழக்கும் என்று அர்த்தம். மற்றும் அந்த ராசிக்குரிய காரக கிரகங்களின் பலம் கெட்டு அந்த ஜாதகர் துன்பப்படுவார்.
அதன்பட்டியல் கீழே,
திதி – சூன்ய ராசிகள் – ராசி அதிபதிகள்
- பிரதமை :துலாம், மகரம் – சுக்கிரன் சனி
- துவிதியை: தனுசு, மீனம் – குரு
- திருதியை :சிம்மம், மகரம் – சூரியன், சனி
- சதுர்த்தி :ரிஷபம்,கும்பம் – சுக்கிரன், சனி
- பஞ்சமி: கன்னி மீனம் – புதன்,குரு
- சஷ்டி :மேஷம், சிம்மம் – செவ்வாய், சூரியன்
- சப்தமி :கடகம், தனுசு – சந்திரன்,குரு
- அஷ்டமி :மிதுனம், – கன்னி புதன்
- நவமி: சிம்மம், விருச்சிகம் – சூரியன், செவ்வாய்
- தசமி :சிம்மம், விருச்சிகம் – சூரியன், செவ்வாய்
- ஏகாதசி: தனுசு,- மினம் குரு
- துவாதசி: மகரம், துலாம் – சனி, சுக்கிரன்
- திரயோதசி: ரிசபம், சிம்மம் – சுக்கிரன், சூரியன்
- சதுர்தசி:மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் – புதன்,குரு
- அமாவாசை, பௌர்ணமி திதிகள் திதி சூன்யம் இல்லை
அமாவாசை, பௌர்ணமி திதியில் திதி சூன்யம் இல்லை. இருந்தாலும் அமாவாசையில் கடகராசியும், பௌர்ணமியில் சிம்மராசியும் திதி சூன்யம் என்று சில நூல்கள் கூறுகின்றன.
இப்படி எந்த திதி சூன்யம் இருந்தாலும் அவர்கள் இத்தல இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.
கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன் துர்க்கை உள்ளனர். அர்த்தமண்டபத்தில் நடராஜர் சபா மண்டபம் உள்ளது அம்பிகையின் சன்னதியும் இங்கே இணைகிறது. வடக்கில் ஒரு கிணறும் உள்ளது. வடகிழக்கில் நவகிரகம் பைரவர் சனிபகவான் சன்னதிகள் அமைந்துள்ளன.
பிரகார சிற்றாலயங்களில் தென்மேற்கில் விநாயகர் மற்றும் முருகன் மகாலட்சுமி உள்ளனர். இங்கு சிறப்பாக முருகன் வில்லேந்திய வேலவராக கையில் வில்லும் அம்பும் ஏந்திய கோலத்தில் இருப்பதை காணலாம். சிவப்பு வண்ண குதிரையில் ஏறி இவர் விழாக்காலங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதியை ஒட்டி இரு பெரிய வில்வமரமும் அதனடியிலொரு விநாயகரும் இரண்டு நாகரும் உள்ளனர்.
வழமையான இடத்தில் சண்டேசர் உள்ளார்.
– தொகுப்பு: Kadambur Vijay ( சிவாலயவிரும்பி )
